தன் அறையில் இருந்தபடியே அனைத்து திட்டங்கள், அறிவிப்புகளின் மீதான நடவடிக்கையை கண்காணிக்கும் வகையில், நிகழ்நிலை புள்ளிவிவரங்களுடன் முதலமைச்சர்களுக்கான மின்னணு தகவல் பலகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தகவல் தொழில் நுட்பவியல் துறை சார்பில் முதலமைச்சருக்கான மின்னணு தகவல் பலகை உருவாக்கப்பட்டுள்ளது. தலைமைச்செயலகத்தில் உள்ள தனது அலுவலக அறையில் இருந்து மின்னணு தகவல் பலகை மூலம் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட மென்பொறியாளர்கள் இணைந்து மின்னணு தகவல் பலகையை தயார் செய்துள்ளனர்.
இதனையடுத்து நிகழ்நிலை புள்ளிவிவரங்களுடன் கூடிய தகவல் பலகை முதலமைச்சர் அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குறுதிகள், வெளியிட்ட அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த தவகல்கள் தகவல் பலகையில் இடம்பெற்றுள்ளது. நாளைய திட்டம், அடுத்த ஒரு ஆண்டுக்கான திட்டம் உள்ளிட்ட அனைத்தும் தகவல்களும் பலகையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எந்த கிராமத்தில் என்ன பணி நடைபெறுகிறது, எங்கு தொய்விருக்கிறது? என முதலமைச்சர் அறிந்துகொள்ளும் வகையில் மின்னனு தகவல் பலகை தயார் செய்யப்பட்டுள்ளது.
தன் அறையில் இருந்தபடியே, இன்றைய தங்கம் விலை நிலவரம், காய்கறி விலை நிலவரம் என அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விரைவில் பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், ஆந்திரா, நாகலாந்து, இமாசலப்பிரதேசம், உத்தரக்காண்ட், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் முதலமைச்சருக்கான மின்னணு தகவல் பலகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement: