தன் அறையில் இருந்தபடியே அனைத்து திட்டங்களின் மீதான நடவடிக்கையை கண்காணிக்கும் மின்னணு தகவல் பலகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் துறை செயலர்களுடனான கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அனைத்துத் துறைகளின் திட்டங்கள் குறித்த தகவல்களை நாள்தோறும் கண்காணிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். மேலும், தகவல் பலகையை கொண்டு வாரம் ஒருமுறை ஆய்வு செய்யவுள்ளதாகவும் அப்போது அவர் கூறியிருந்தார்.
முதலமைச்சர் அறையில் வைக்கப்படவுள்ள மின்னணு தகவல் பலகையில் நிகழ்நிலை புள்ளிவிவரங்கள் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, வாக்குறுதிகள், வெளியிட்ட அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த தவகல்கள் பலகையில் இடம் பெறும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஒரு ஆண்டுக்கான திட்டம் என அனைத்தையும் தகவல் பலகையில் உள்ளடக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எந்த கிராமத்தில் என்ன பணி நடைபெறுகிறது, எங்கு தொய்விருக்கிறது? என முதலமைச்சர் அறிந்துகொள்ளும் வகையில் டேஷ்போர்டு தயார் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.








