கொரோனா முதல் அலைக்கு முற்றுப்புள்ளி வைக்காததே 2-ம் அலை பரவலுக்கு காரணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தளர்வற்ற ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் நிறுவனங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி ஸ்ரீபெரும்புதூரையடுத்த ஒரகடத்திலுள்ள தனியார் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அப்போது அமைச்சர் தா.மோ அன்பரசன், மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். இம்முகாமில் 4-ஆயிரம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து, சுங்குவார் சத்திரம் பகுதியிலுள்ள தனியார் ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கு ஒருநாளைக்கு 180 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவது குறித்த விவரங்களை அந்நிறுவன உரிமையாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர், பூந்தமல்லி நேமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி மையத்தை ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள படுக்கை வசதிகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “ கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்தி கொள்ளவேண்டும். முழு ஊரடங்கால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளதாகவும், கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.
தமிழகத்தில் தினமும் 78,000 தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதாகவும் கடந்த காலங்களில் தடுப்பூசி வீணடிப்பு 6 சதவிகிதம் ஆக இருந்ததை கடந்த இருவாரங்களில் 1 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கொரோனா முதல் அலைக்கு முற்றுப்புள்ளி வைக்காததே, இரண்டாம் அலை பரவலுக்கு காரணம் எனக்கூறிய முதல்வர் தேவைப்பட்டால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.
சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்த 1,400 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ரெகுலேட்டர்கள் உள்ளிட்டவைகள்
பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையொட்டி சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்,ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கொண்ட லாரிகளை முதலமைச்சர் ஸ்டாலின் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.