செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம், கடந்த 9 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், கொரோனா தடுப்பூசிகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில், மீண்டும் தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இதே கோரிக்கையை பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் வலியுறுத்தி வந்த நிலையில், இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தடுப்பூசி வளாகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மீண்டும் தடுப்பூசி மையத்தை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அங்கு மீண்டும் தடுப்பூசி உற்பத்தி தொடங்குவது குறித்த ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்வார் எனவும் தகவல் வெளியாகி யுள்ளது.







