தமிழ்நாட்டில் 4 முதல்வர்கள் மட்டும் இல்லை, நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று அண்ணா கூறிய வார்த்தைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின் 4-வது தமிழ் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுய தொழில்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். அரசு வேலைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மாற்றுத்திறானிகளின் அனைத்து கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு நிச்சயம் நிறைவேற்றும் எனவும் முதலமைச்சர் கூறினார்.
ஓட்டுக்காக மட்டும் மக்களை சந்திக்க வருபவன் தாம் அல்ல என்றும் எப்போதும் மக்களின் குறைகளை கேட்பவர் தாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு அரசுக்கு எதிராக எத்தனை போராட்டம் நடத்தினாலும் மக்கள் அதனை நம்பமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் 4 முதல்வர்கள் உள்ளனர் என அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு,க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே எனக் குறிப்பிட்டார். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று கூறிய அண்ணாவின் வார்த்தைகளின் அடிப்படையில் திமுக ஆட்சி நடைபெற்றுவருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிடோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.







