சட்டவிரோதமாக குடியேறிய இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது – மத்திய அரசு

சட்டவிரோதமாக குடியேறிய இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருச்சி கொட்டப்பட்டு முகாமில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து முடிவெடுக்குமாறு தனி…

சட்டவிரோதமாக குடியேறிய இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திருச்சி கொட்டப்பட்டு முகாமில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து முடிவெடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

தனி நீதிபதி உத்தரவின்படி மனுவை பரிசீலித்து முடிவெடுக்காமல் எதற்காக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு மாறி இருப்பதாகவும், இதுகுறித்து தமிழ்நாடு அரசு முடிவெடுக்க உத்தரவிடாலாம் என்றும் அகதிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து சட்டங்களுக்கு உட்பட்டே தமிழ்நாடு அரசு முடிவெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.