சித்ரங் புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று காலை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று மாலை 17.30 மணி அளவில் புயலாக (SITRANG) வலுப்பெற்று, இன்று காலை 8.30 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில், சாகர் தீவுகளுக்கு தெற்கே 380 கிலோமீட்டர் தொலைவிலும், BARISAL(வங்காள தேசம்)க்கு தெற்கு-தென்மேற்கே 520 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது மேலும் வடக்கு வட-கிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுபெறக்கூடும். அதன் பின்னர் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 25ம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையை கடக்கக்கூடும்.
இன்று தென் தமிழக மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை முதல் 27ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள் ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
24.10.2022 முதல் 28.10.2022 வரை: தமிழக கடலோர பகுதிகளுக்கான மீனவர் எச்சரிக்கை ஏதுமில்லை. 24ம் தேதி மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 95 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஒரிசா-மேற்கு வங்காள கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
25.10.2022: வடக்கு வங்கக்கடல் மற்றும் வங்கதேச கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.