ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில், சொன்னதை சொல்லாதது போலவும், சொல்லாததை சொன்னது போலவும் திரித்துக் கூறப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது பாண்டியர்களின் 221வது நினைவு நாளை
முன்னிட்டு, அவரது நினைவு மண்டபத்தில் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் தொண்டர்களுடன் புதுக்கோட்டையில் இருந்து கிளம்பி திருப்பத்தூருக்கு சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், “ஜெயலலிதா, எங்களை ஆளாக்கியவர். ஜெயலலிதா எங்களுக்கு தெய்வம், கடவுள். ஆறுமுகசாமி ஆணையத்தில் என்னை பற்றி கூறியுள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. ஒருதலைப் பட்சமானது. அரசியல் உள்நோக்கம் கொண்டது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குணமாகி மீண்டு வர வேண்டும் என்று போராடிய லட்சோப லட்சம் தொண்டர்களில் நானும் ஒருவன். சுகாதாரத்துறை அமைச்சராக நான் என்னுடைய கடமையை மனசாட்சியோடு செய்துள்ளேன். ஆறுமுகசாமி ஆணையத்தில் சொல்லாததை சொன்னது போலவும், சொன்னதை சொல்லாதது போலவும் கருத்துக்கள் திரித்து கூறப்பட்டுள்ளன.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கூறப்பட்ட இந்த கருத்துக்கள் இந்திய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இவை வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல் உள்ளது. இருப்பினும் பொது வாழ்க்கையில் உள்ள நாங்கள் சட்ட வல்லுநர்களோடு கலந்து பேசி, நேர்மையோடும் நெஞ்சுறுதியோடும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
அப்போது சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், இந்திய அளவில் திறமையான செயலாளர்களுள் ஒருவர். நேர்மையான அதிகாரியாக பணியாற்றி வந்தார். கொரோனா காலக்கட்டத்தில் உலகமே உயிர் பயத்தில் இருந்தபோது என்னுடன் களத்தில் இறங்கி பணியாற்றியவர் அவர். ஆணை அறிக்கையில் அவரைப் பற்றியும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. அவராக இருந்தாலும், நானாக இருந்தாலும், மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்பதன் அடிப்படையில் சட்டப்படி இதை நாங்கள் எதிர் கொள்வோம்” என்றார்.