முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள் ஜனவரி மாதம் உலகளாவிய புகழை அடையபோவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் உயர்கல்விச் சிறப்பு குறித்த செவ்வரங்கம் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. NIRF தரவரிசையில் சிறப்பான இடங்களை பிடித்த உயர்கல்வி நிறுவனங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, பல்கலைக்கழக துணைவேந்தர்கள், தனியார் கல்லூரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், NIRF தரவரிசையில் சிறப்பான இடங்களை பிடித்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். முதலமைச்சர் படித்த மாநிலக் கல்லூரியும் NIRF தரவரிசையில் இடம்பிடித்துள்ளது, இதுவே தமிழ்நாட்டின் உயர்கல்வி சிறப்புக்கு சான்று என கூறினார். மாநிலக் கல்லூரியை மேலும் மேம்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ள சென்னை ஐ.ஐ.டி.,க்கு பாராட்டு தெரிவித்தார். முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் அமைப்பாக வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி திகழ்கிறது. நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளது. வேலூர் CMC, சென்னை சவீதா, SRM ஆகியவை சிறப்பான இடங்களை பிடித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

NIRF தரவரிசையில் 12-வது இடத்தில் வந்துள்ளது மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி. அடுத்தடுத்த ஆண்டுகளில், முதல் 10 இடங்களுக்காக MMC-யும் இடம்பெறும். அதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்தித்தரும் என கூறினார். வரும் ஜனவரியில் சுவிட்சர்லாந்தில் World Economic Forum நடத்தும் மாநாடு நடைபெற உள்ளது. அதில் இந்தியாவின் பிரதிநிதியாக நான் செல்லும் போது நீங்களும் என்னுடன் வாருங்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எனக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள், நல்லாட்சியின் புகழ், வரும் ஜனவரியில் உலகளாவிய புகழை அடைய உள்ளது. இந்தியாவிலேயே அதிகளவில் 70 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இதன் மூலம் 10,000 மாணவர்கள் மருத்துவம் பயிலும் வாய்ப்பு உருவாக்கித்தரப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் அரசாக இருந்தாலும் சரி, அவர்களை பாராட்டும் ஆளுநராக இருந்தாலும் சரி அனைத்திலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்







