நாளை பொதுத் தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்நாட்டில் நாளை தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை,  9 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுத உள்ள நிலையில்,  மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை ( மார்ச்…

தமிழ்நாட்டில் நாளை தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை,  9 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுத உள்ள நிலையில்,  மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை ( மார்ச் – 26 )  பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  12,616 பள்ளிகளை சேர்ந்த 9.38 லட்சம் மாணவ,  மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.  இதில் தனித் தேர்வர்கள் 28,000 பேரும், 235 சிறைக் கைதிகளும் தேர்வு எழுத உள்ளனர்.

பொதுத்தேர்வுக்கான அறைக் கண்காணிப்பு பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  தேர்வு மையங்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை பிடிக்க 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  அதேபோல், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர்,  வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா!

தேர்வு மையங்களில் குடிநீர்,  இருக்கை,  மின்சாரம்,  காற்றோட்டம்,  வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்வு அறைக்குள் கைப்பேசி எடுத்து வருவதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும்,  ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில்,  நாளை பத்தாம் வகுப்பு எழுத உள்ள மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் X தளத்தில் பதிவிட்டதாவது:

“பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே… All the best!

நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.  அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள்.  பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள்.”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1772122599558099085?t=IPeclKgChjWPloj0gKwLfQ&s=08

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.