“குறட்டையால் நீரிழிவு நோய், மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு” – மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

குறட்டை விடுவதால் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூட்டமைப்பின் (ஐஏஎஸ்எஸ்ஏ) தலைவர் டாக்டர் ப.விஜயகிருஷ்ணன் தெரிவித்தார்.   உலக…

குறட்டை விடுவதால் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூட்டமைப்பின் (ஐஏஎஸ்எஸ்ஏ) தலைவர் டாக்டர் ப.விஜயகிருஷ்ணன் தெரிவித்தார்.  

உலக தூக்க தினத்தை முன்னிட்டு மெட்ராஸ் காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி மையம் மற்றும் ஐஏஎஸ்எஸ்ஏ அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நடைப்பயணம் சென்னை பெசன்ட்நகர் கடற்கரை சாலையில் நேற்று (மார்ச் 24) நடைபெற்றது.  இந்த நடைபயணத்தில்,  மெட்ராஸ் காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி மையத் தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன்,  ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி,  திரைப்பட நடிகர் ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நடைப்பயணம் மொத்தம் 5 கி.மீ. தொலைவு நடைபெற்றது.  இதில் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.   இந்த நடைப்பயணத்தின் போது மெட்ராஸ் காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி மையத் தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் கூறியதாவது:

“குறட்டை மரணத்தின் ஒலி.  குறட்டை தூக்கத்தின் போது மூச்சுத்தடை ஏற்படுவதற்கான அறிகுறி.  இதனால் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து விடும்.  இதனால் மூளை, இதயம் இரண்டும் பாதிக்கப்படும்.  குறட்டை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.  அனைவரும் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ” என்றார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூட்டமைப்பின் (ஐஏஎஸ்எஸ்ஏ) தலைவர் டாக்டர் ப.விஜயகிருஷ்ணன் கூறியதாவது:

“ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியம்.  ஆழ்ந்த உறக்கம் உடலில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும்.  பலர் தூக்கத்தின்போது குறட்டை விடுவதை பெரிய பிரச்னையாக எடுத்துக் கொள்வதில்லை.   ஆனால்,  அது உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒன்று.  உடல் உறுப்புகள் முறையாக இயங்குவதற்கும், அகச்சுரப்பிகள் முறையாக செயல்படுவதற்கும் ஆக்சிஜன் இன்றியமையாதது.

சுவாசப் பாதையில் ஏற்படும் சதை வளர்ச்சி,  தசைகள் தளர்வு, உடல் பருமன் போன்ற காரணங்களால் தூக்கத்தில் சரியாக சுவாசிக்க முடியாது.  அப்போதுதான் குறட்டை வருகிறது.  சரியாக சுவாசிக்க முடியாமல் உடலில் ஆக்சிஜன் குறையும்போது அகச்சுரப்பிகளில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய், தைராய்டு,  மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் வரலாம்.

அனைவரும் குறட்டை பாதிப்பை அலட்சியமாக விடாமல் உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.  இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்  ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மெட்ராஸ் காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி மையத்தில், இந்த மாதம் முழுவதும் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.