முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணாடியில் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இல்லாத பிரச்சனைகளுக்கு எல்லாம் ஆளுநர் தான் காரணம் என அவரது கடிதம் இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவியின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்தியா ஒரு இறையாண்மை மிக்க, மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு என்றும், இந்த கொள்கைகளில் நம்பிக்கை இல்லாத ஆளுநர், அரசியலமைப்பு பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல்வாதியாக மாறும் ஒரு ஆளுநர், அப்பதவியில் தொடரவே கூடாது என்றும், சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தேவையில்லாத காலதாமதம் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், ஆளுநர் பதவிக்கு ஆர் என் ரவி தகுதியற்றவர் என விமர்சனர் செய்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பதில் அளிக்கும் வகையில் கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது;
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணாடியில் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இல்லாத பிரச்சனைகளுக்கு எல்லாம் ஆளுநர் தான் காரணம் என அவரது கடிதம் இருக்கிறது. தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது, திமுக செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவு இருக்கிறது. நிறைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இவற்றை விட்டுவிட்டு ஆளுநரை சீண்டிப் பார்க்கின்றனர்.
ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கியது தவறு என்று சொல்கின்றனர். அந்த விஷயத்தை விவாதிக்க நேரம் இருக்கிறது. அதே வேளையில் எதற்காக முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது ஆளுநரிடம் அமைச்சர்களை நீக்க வேண்டும் என ஏன் வலியுறுத்தினார்?. செந்தில் பாலாஜி ஒரு உத்தமராகவும், மாநிலத்தை காக்க வந்த சேவகாராகும் விதமாக அந்த கடிதம் அனுப்பி இருக்கின்றனர். தன்னுடைய கட்சி செய்யக்கூடிய தவறுகளை மறைக்க ஆளுநர் மீது குற்றசாட்டுகளை கூறுவதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?
கள்ளச்சாராய சாவு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என ஏராளமான பிரச்சினைகள் இருக்கும்பொழுது ஆளுநர் மீது அனைத்து பழிகளும் போடப்படுகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய திமுக எம்பி,எம்.எல்.ஏ ஆளுநரின் மாண்புக்கு உரிய வகையில் அவரை பேசுவதே இல்லை. இவர்கள் கொடுப்பதை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை.ஆளுநர் அப்படி படிக்க வேண்டும் என்றால் அரசியலமைப்பு சட்டத்தை சொல்லி இருக்க வேண்டும். எங்கெல்லாம் பொய் இருக்கிறதோ அதையெல்லாம் ஆளுநர் படிக்காமல் இருந்திருக்கின்றார். திமுக சொல்லுவதை எல்லாம் ஆளுநர் சொல்ல முடியாது. இவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஆளுநரிடம் என்ன சொன்னார்கள்.
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். முதலமைச்சரின் கடிதத்தில் அவரது இயலாமை தான் வெளிப்படுகிறது. சிதம்பரம் குழந்தைகள் விவகாரத்தில் ஆளுநர் மீது எப்படி வழக்கு செய்ய முடியும்? தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரித்து ஒரு அறிக்கை கொடுத்து இருக்கிறது. அவர்கள் சொல்வது தவறா? காவல்துறை சொல்வது தவறா? என்பதுதான் விவாதமே தவிர ஆளுநர் எப்படி இதற்கு பொறுப்பாவார்.
ஆளுநருக்கு ஜி யு போப் திருக்குறளை மொழி மாற்றம் செய்ததில் மாறுபட்ட கருத்து இருக்கிறது. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது.ஆனால் ஜி யு போப் குறித்து் சொந்த கருத்தை சொல்லி இருக்கின்றார். கலாச்சாரத்தைப் பற்றி, பண்பாட்டை பற்றி ஆளுநருக்கு பேச உரிமை இருக்கிறது. முதலமைச்சர் எழுதிய கடிதம் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. தோல்வி பயத்தைக் காட்டும் விதமாகவே அவரது கடிதம் இருக்கிறது. தமிழகத்தின் உண்மையான நிலையை பி்திபலிக்கும் விதமாக முதல்வரின் கடிதம் இல்லை. இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா