நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இதில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 3 மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1000ம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடல் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முகாமிட்டனர். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது.
இந்த விழாவில் பங்கேற்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து விருது வழங்கும் விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றது. இந்த பாடல் ஆஸ்கர் மேடையில் பாடப்பட்டது. அப்போது அந்த அரங்கமே எழுந்து நின்று கரவொலி எழுப்பியது.
இதையடுத்து ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் என்ற வரலாற்றை படைத்துள்ளது; இந்த அற்புதமான சாதனையை படைத்த ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.