இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த
9 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையின் முல்லைத் தீவு அருகே மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர் கதையாகி வருகிறது. இந்த தொடர் கைது சம்பவத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் 6-8-2022 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், கடந்த 10-8-2022 அன்று இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கையில் உள்ள திரிகோணமலை கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் இலங்கை அரசு விரைவில் விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
-ம.பவித்ரா








