திமுக தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
திமுகவின் ஒன்றிய, நகர, நகரிய, பேரூர், பகுதிக் கழக, மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் பொதுக்குழு சென்னை அமைந்த கரை செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் அக்டோபர் 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்புமனு இன்று நடைபெற்றது.
தலைவர் பதவிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் வேட்புமனு அளித்தனர். இந்நிலையில், மாலை 5 மணி வரை நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில், தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை தவிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வானார்.
2-வது முறையாக திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வானதால், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வு அறிவிப்பு நாளை மறுநாள் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.
-இரா.நம்பிராஜன்








