பழங்குடியினர் உற்பத்தி செய்யும் பாரம்பரிய கலைப் பொருட்களை இந்தியாவிற்குள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு
மாவட்டம் வாரியாக கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதியிலிருந்து துறை சார்ந்த மத்திய அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியும் வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகையில் மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அரசு விருந்தினர் மாளிகையில் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது.
பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ”தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் மரப்பாலம் முதல் கூடலூர் வரை ரூ.138 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கால்நடை பராமரிப்புத் துறை கீழ் கூடலூரில் ரூ.36 லட்சம் மதிப்பில் சாண எரிவாயு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள 75 நீர்நிலைகள் மேம்படுத்தப்படும். அதேபோல் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் குடும்பங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேரும், உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் 32 ஆயிரம் பேரும் பயனடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 வீதம் 48 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஜன்தன் திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி டெபாசிட்டாக பெறப்பட்டுள்ளது.
பாரதப் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 47 ஆயிரம் பேருக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை மருத்துவ செலவு செய்துகொள்ள காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடர், இருளர், குறும்பர், பணியர், கோத்தர்,
காட்டுநாயக்கர் என பழங்குடியினர் உற்பத்தி செய்யும் பாரம்பரிய கலைப் பொருட்களை இந்தியாவிற்குள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விற்பனை செய்யவும், காட்சிப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், மாவட்டம்தோறும் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க ஏதுவாக 391 நடமாடும் கால்நடை மருத்துவ மையங்கள் மொபைல் யூனிட் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும். பெண்களுக்கான முத்ரா கடன் உதவி வழங்கும் திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது” என்று கூறினார்.







