சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 முதுநிலை திருக்கோயில்களில் பெருந்திட்ட வரைவு பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியபாளையம், திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம், வள்ளலார் நிலையம், பழனி, இருக்கன்குடி, திருவேற்காடு உள்ளிட்ட கோயில்களில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் 5 கோயில்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு பணிகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.
மருதமலை, சிறுவாபுரி, வயலூரில் ஒளவையாருக்கு மணிமண்டபம், மயிலாப்பூர் கலாச்சார மையம், திருவள்ளுவர் திருக்கோயிலை பிரம்மாண்டப்படுத்தி திருக்கோயில் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தீட்சிதர்கள் என்றாலே பிரச்னை தான் எனக்கூறிய அவர், சிதம்பரம் கோயிலை தணிக்கை மேற்கொள்ள தீட்சிதர்கள் அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டினார். மக்களின் ஆதரவால் செயல்படும் கோயில் குறித்த தகவலை அரசுக்கு தர தீட்சிதர்கள் மறுப்பதாக கூறிய அவர், ஒட்டுமொத்த பக்தர்களின் விருப்பப்படி சிதம்பரம் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் என குறிப்பிட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 286 சிலைகள் மீட்க்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த ஆட்சியிலும் இவ்வளவு சிலைகள் மீட்கப்பட்டவில்லை. திருடுபோன சிலைகளை மீட்பது மட்டுமல்லாமல் இருக்கின்ற சிலைகளை பாதுகாக்கவும் க்யூ ஆர் கோடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். இந்துசமய அறநிலையத்துறை மீது குற்றம் சொல்ல பூதக்கண்ணாடி வைத்து பார்க்கிறார்கள்.
இந்த ஆட்சியில் தான் அதிகளவு குடமுழுக்கு , நிலங்கள் மீட்பு, கிராமபுற கோவில்கள் ஆதிதிராவிடர் பழங்குடினர் பகுதி கோவில்களுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்ய ஒரு சிலர் நினைக்கிறார்கள் அது நிச்சயம் நடக்காது.வேண்டுமென்று குற்றம் சொல்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எந்த கோவிலுக்கு சென்றாலும் விருப்பப்பட்டு செல்பவர்களுக்கு வேறு ஏதும் அடையாளத்தோடு அல்லாமல் வந்தால் அனுமதிக்கிறோம். அறநிலையத்துறை கோவில்களில் மத அடையாளமின்றி வருபவர்களுக்கு அனுமதி உண்டு என்று கூறினார்.
காய்ந்து போன பூமி எல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் சொல்லும், அந்த நதியை காய்ந்து போட்டால் தெய்வத்திடம் முறையிடுவார்கள் , அந்த தெய்வமே கலங்கி நின்றால்… என செய்வது என்று தங்கப்பதக்கம் திரைப்பட வசனத்தை மேற்கோள்காட்டி தீட்சிதர்கள் மீது அமைச்சர் சேகர் பாபு குற்றஞ்சாட்டினார்.









