சென்னை போக்குவரத்து காவல் துறையில் தலைமை காவலராக பணியாற்றிவரும் புருஷோத்தமன் சமீபத்தில் நடைபெற்ற மாநில ஆணழகன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார்.
சென்னை போக்குவரத்து காவல் துறையில் அடையார் பகுதியில் பணியாற்றிவருபவர் தலைமை காவலர் புருஷோத்தமன்(41) . இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திருமழிசையில் மாநில ஆணழகன் போட்டியில் 80 கிலோ எடைப் பிரிவில் கலந்துகொண்டு வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார்.

தலைமை காவலர் புருஷோத்தமன் கடந்த பல வருடங்களாக ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு பல பதக்கங்களைப் பெற்றுவருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற மெட்ராஸ் ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு ‘மிஸ்டர் தமிழ்நாடு’ பட்டத்தை வென்றார். தமிழக காவல் துறையில் பணியாற்றிக்கொண்டே ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டுவரும் புருஷோத்தமனை காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலரும் ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
தற்போது இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றதன் மூலம் ஏப்ரல் மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய ஆணழகன் போட்டியில் புருஷோத்தமன் கலந்துகொள்ளத் தகுதிபெற்றுள்ளார்.







