சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த தண்டனை கைதி தப்பியோடிய நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
2017 ஆம்ஆண்டு ராணி என்பவரின் 8 சவரன் தங்க சங்கிலியை வழிப்பறி செய்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதால் சீனிவாசன் என்பவர் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தால் கடந்த 16ஆம் தேதி 2000 ஆயிரம் ருபாய் அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையென தண்டனை விதிக்கப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
இந்நிலையில் நேற்று முன்தினம் புழல் சிறையில் சீனிவாசனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரியவந்தது. இதனையடுத்து சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 4-வது தளத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேற்று காலை சிகிச்சை பெற்று வந்த கைதி சீனிவாசன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளார்.
அவருக்கென பாதுகாப்பிற்காக இரண்டு காவலர்கள் பணியமர்த்தபட்டும் கூட கைதி
சீனிவாசன் தப்பி சென்றுள்ளார். இது குறித்து இராயபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் அங்கிருக்க கூடிய சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய கைதி சீனிவாசனை தேடி வருகின்றனர்.
-ரெ.வீரம்மாதேவி
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சிறைக்கைதி தப்பியோட்டம்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.