சென்னையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று முழுவதும் சென்னை முழுவதும் தொடர் மழை பெய்து வந்தது. சென்னைக்கு 30 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
இதனால் தரைக்காற்று 30-35 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும், சென்னையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் மூலம் மரங்கள் சாய்வதும் விளம்பரப் பலகைகள் விழுவது போன்ற சம்பவங்கள் ஏற்படும் எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது சென்னையில் அதி கன மழைக்கான வாய்ப்பு குறைவு என்றும் குறிப்பிட்டார்.
சென்னையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாகவும், இருந்தாலும் காற்றுக்கும் கனமழைக்குமான ரெட் அலர்ட் தொடரும் என்றும் கூறினார்.
இதனிடையே ஆபத்தை உணராமல் மெரினா கடற்கரையில் குவிந்த பொதுமக்களை காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.








