ஆன்லைன் மோசடியால் சென்னையை சேர்ந்த இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக செயல்பட்டு நைஜீரிய நாட்டை சேர்ந்தவரை டெல்லியில் வைத்து கைது செய்தது.
சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்தவர் அஸ்வினி(20).இவர் அப்பகுதியில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அஸ்வினி தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அஸ்வியின் அறையில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் தான் மோசடி கும்பல் ஒன்றிடம் சிக்கிகொண்டதாகவும், போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்திலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும்,தன்னுடையை சாவுக்கு வேறு யாரும் காரணமில்லை எனவும் கூறப்பட்டிருந்தது.
கடிதத்தை வைத்து முதற்கட்ட விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவர தொடங்கியது.அதாவது அஸ்வினி பியூட்டி பார்லரில் வேலை செய்தப்போது கடைக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமாக வாங்கிய போது சமூக வலைத்தளம் மூலமாக லண்டனை சேர்ந்தவர் என இளைஞர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.நட்பாக தொடங்கிய இருவர் பழக்கம் நாளடைவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி இளைஞர் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தனது குடும்ப சூழ்நிலைக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை சரிவராது என அறிந்த அஸ்வினி அந்த இளைஞரை தவிர்க்க தொடங்கியுள்ளார்.இருப்பினும் அந்த இளைஞர் தொடர்ந்து அவருக்கு வாட்ஸப் மூலமாக கால் செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி அஸ்வினியை தொடர்புகொண்ட அவர் உனக்கு 15ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசாக அனுப்பி உள்ளதாக அதற்கான பார்சல் சென்னை
சுங்கத் துறை அலுவலகத்தில் உள்ளதாகவும்,பணம் செலுத்தினால் பார்சல் வந்துவிடும் எனவும்,இல்லையெனில் பெறுநர் முகவரியை வைத்து காவல்துறை தங்களை கைது செய்துவிடும் எனவும் மிரட்டியுள்ளார்.
பின்னர் தானே சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து அஸ்வினியிடம் இருந்து அந்த நபர் சுமார் 45ஆயிரம் வரை பணம் பறித்துள்ளார்.ஆனாலும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் மனமுடைந்த அஸ்வினி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதனையடுத்து கீழ்ப்பாக்கம் மர்ம நபரை கைது செய்ய முடிவு செய்தனர். டெல்லியில் இருந்து செயல்படும் மர்ம கும்பல் இச்செயலில் ஈடுபட்டது. குறிப்பாக இந்த கும்பல் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளம் வயதினர், விதவைகள் ஆகியோரை குறிவைத்து செயல்படுகின்றனர்.
இதனையடுத்து டெல்லி விரைந்த போலீசார் மோசா எனும் நைஜீரிய நாட்டை சேர்ந்த இளைஞரை கைது செய்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இந்த கும்பல் வேறு யாரிடமும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
வேந்தன்