சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்னை, திரு.வி.க நகர் மண்டல அலுவலகத்தில் நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலைகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சியின் சார்பில் 2.5 லட்சம் கொசு வலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொளத்தூர் தொகுதியில் நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்பின், ஓட்டேரி நல்லா கால்வாய், ஸ்டீபன்சன் சாலையில் மேம்பால பணிகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பல்லவன் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டதோடு, மழையினால் அப்பகுதியில் தேங்கியிருந்த மழை வெள்ளத்தை மாநகராட்சி ஊழியர்கள் ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியையும் பார்வையிட்டு, மழைநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மக்கள் பாராட்டுகின்றனர். மக்களின் பாராட்டுக்கள் எங்களுக்கு போதும். மழையை எதிர்கொள்ள மாநகராட்சி மற்றும் அரசு சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.