கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட வசதிகளை அப்புறப்படுத்த வேண்டாம் எனவும், ஆக்சிஜன் உற்பத்தியை தொடர வேண்டும் எனவும் மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமடைந்த போது, ஆக்சிஜன் தட்டுபாடு, தடுப்பூசி மற்றும் மருந்து வினியோகம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மாநிலத்தில் இதுவரை 1 கோடியே 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் 6500 க்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளன எனவும், தடுப்பூசி போடும் பணிகள் முன்னேற்றமடைந்துள்ளதாகவும், கொரானா தொற்று பரவல் வெகுவாக குறைந்திருப்பதாக தெரிவித்தார்.
இதை பதிவு செய்த தலைமை நீதிபதி அமர்வு, மூன்றாவது அலை தாக்கும் அபாயம் இருப்பதாக கூறுவதற்கு எந்த அறிவியல் பூர்வமாக ஆதாரங்களும் இதுவரை இல்லை என்ற போதிலும், எதிர்காலத்தில் பரவல் அதிகரிக்கும் போது, அதை எதிர்கொள்வதற்காக, இரண்டாவது அலையை சமாளிக்க ஏற்படுத்தப்பட்ட வசதிகளை அகற்ற வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், ஆக்சிஜன் உற்பத்தியையும் தொடர வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், தடுப்பூசி மருந்து வினியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் எனவும், தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு தாமாக முன் வந்து எடுத்த வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.







