30.8 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிங்காரச் சென்னையை, சீர்மிகு சென்னையாக உருவாக்கியது திமுக – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

 சிங்காரச் சென்னையை, சீர்மிகு சென்னையாக உருவாக்கியதில் திமுகவிற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி பகுதியில் ரூ. 2,465 மதிப்பில் நாள்தோறும் 750 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள் : டெல்லியில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு – இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு! 

பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது :

“அரசு பொறுப்பேற்று முதன்முதலில் கவனித்த துறை மட்டுமல்ல, வளர்த்த துறை இந்தத் துறை அதோடு என்னுடைய இதயத்திற்கு நெருக்கமான கடல் நீரை குடிநீராக்கக்கூடிய திட்ட தொடக்க விழாவில் கலந்து கொள்வதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன். இன்று இந்தத் திட்டத்தோடு சேர்த்து ரூ. 2,465 கோடி மதிப்பிலான 96 முடிவுற்ற திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், 1,802 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 39 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் நேருவை பொறுத்தவரைக்கும், எதையுமே பிரம்மாண்டமாகத்தான் செய்வார். கட்சி சார்பாக நடத்தும் மாநாடாக இருந்தாலும், அதை நாங்கள் அமைச்சர் நேருவிடம்தான் ஒப்படைப்போம். ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் போன்ற பிரமாண்டமான துறையையும் அமைச்சர் நேருவிடம்தான் ஒப்படைத்திருக்கிறோம். நம்முடைய தமிழ்நாடு அதிகப்படியான நகரமயமாக்கல் கொண்ட மாநிலம். அதனால்தான், நகராட்சி நிர்வாகத்தை மட்டும் தனியாக கவனிக்க ஒரு அமைச்சர் வேண்டும், அதுவும் துடிப்பாக செயல்படுகின்ற அமைச்சர் வேண்டும் என்று தேர்ந்தெடுத்து அமைச்சர் நேருவிடம் நான் அதை ஒப்படைத்தேன்.

நகர்ப்புற மக்களுடைய அவசியத் தேவைகளான கல்வி,மருத்துவம், குடிநீர், சாலைகள் போன்றவற்றை முறையாக சரியாக நம்முடைய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மிக மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நீர் இன்றி அமையாது உலகு. இதைவிட குடிநீரின் தேவையை யாராலும் விளக்கி சொல்லிவிட முடியாது. அதனால்தான் கடுமையான நிதி நெருக்கடி காலத்திலும், ரூ. 100 கோடி மதிப்பிலான குடிநீர்த் திட்டங்களை நாம் தீட்டி வழங்கி வருகிறோம்.

2006-2011 திமுக ஆட்சியில் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தேன். மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்க 2007-ஆம் ஆண்டு நான்தான் அடிக்கல் நாட்டினேன். அதற்கு பிறகு 2010-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அதை திறந்து வைத்தார்கள்.இந்த நிலையத்திலிருந்து கிடைக்கின்ற குடிநீர் மூலம், வடசென்னையில் சுமார் 10 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

இதை தொடர்ந்து நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு 2010-ஆம் ஆண்டு நான்தான் அடிக்கல் நாட்டினேன். இந்த நிலையத்தின் மூலமாக தென்சென்னையில் வசிக்கின்ற சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். அதனால்தான், பேரூரில், இது மாதிரியான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த நிலையம், தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமைய இருக்கிறது. இந்த நிலையத்தை அமைக்கின்ற பணிகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு நிச்சயமாக, உறுதியாக கொண்டு வரப்படும். நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் இன்றைக்கு நாட்டு மக்களுடைய பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலையத்திலிருந்து பெறப்படுகின்ற குடிநீர் மூலம், தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனித தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர் உள்ளகரம், புழுதிவாக்கம் மடிப்பாக்கம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மற்றும் ஓ.எம்.ஆரில் இருக்கின்ற ஐ.டி. நிறுவனப் பகுதிகளில் இருக்கின்ற சுமார் 9 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில், முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்திருக்கிறேன். நகராட்சி நிர்வாக இயக்ககத்தின் சார்பில், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கின்ற ரூ.172 கோடி  மதிப்பிலான 52 திட்டப்பணிகளையும் திறந்து வைத்திருக்கிறேன்.

இதையடுத்து, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று முடிந்திருக்கின்ற ரூ.70 கோடி  மதிப்பிலான பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. பேரூராட்சிகள் இயக்கத்தை எடுத்துக்கொண்டால், ரூ.33 கோடி  மதிப்பிலான 12 திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மூன்று தனி குடிநீர்த் திட்டங்களையும், ஆறு கூட்டுக் குடிநீர் திட்டங்களையும் தொடங்கி வைத்திருக்கிறேன். இதன் மொத்த மதிப்பு ரூ. 533 கோடியாக உள்ளது. 364 வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டிருக்கின்ற குப்பைகள், ரூ.648 கோடியே 38 லட்ச செலவில், உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கின்ற பணிக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.

நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில், ரூ.813 கோடி மதிப்பிலான 23 திட்டப்பணிகளுக்கும், பேரூராட்சி இயக்குநரகம் சார்பில் ரூ.238 கோடி மதிப்பிலான பணிகளுக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இப்படி மொத்தம் ரூ. 1,802 கோடி மதிப்பில் 39 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இவை எல்லாமே திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பாகவே திறக்கப்படும்.

சிங்காரச் சென்னையை, சீர்மிகு சென்னையாக உருவாக்கியதில் திமுகவிற்கு பெரிய பங்கு இருக்கிறது.  சென்னை மாநகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக இரண்டு முறை இருந்தவன் நான். அப்போது சென்னையின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைத் தீட்டி வழங்கி இருக்கிறோம். இன்றைக்கு சென்னையை நீங்கள் சுற்றி வரும்போது பார்க்கின்ற மேம்பாலங்கள் உள்ளிட்ட பல கட்டமைப்புகள் திமுக ஆட்சிக்காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.

பெருகி வருகின்ற மக்கள்தொகையை கணக்கில் கொண்டு, நெம்மேலியில் இந்த நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. நாம் திட்டமிடுகின்ற கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்படுவது மூலமாக நாளொன்றுக்கு 750 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன்கொண்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் நிறுவப்பட்ட மாநகரம் என்ற பெருமையை சென்னை மாநகரம் அடையும்.

இதன்மூலம் நம்முடைய அரசு, சென்னை மாநகர மக்களுடைய குடிநீர்த் தேவையை பூர்த்திசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறது. இதை சிறப்பாகவும், விரைவாகவும் அமைச்சர் கே.என்.நேரு செய்து காட்டுவார் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது.

சென்னை மாநகராட்சியின் கட்டடத்திற்கு அருகில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை சூட்டவேண்டும் என்று, கலைஞரின் நூற்றாண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, நிச்சயமாக அந்த கட்டடத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு விழா கட்டடம்’ என்று பெயர் சூட்டப்படும்.”

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading