சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது

சென்னை அமைந்தகரையில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி சாலையில்…

சென்னை அமைந்தகரையில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி சாலையில் செல்லும்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முரளிதரன் (56) சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்று கோயம்பேடு பகுதியில் உள்ள இருட்டு பகுதியில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

பயந்துபோன சிறுமி முதியவரை தள்ளிவிட்டு அங்கு இருந்து தப்பித்து ஒடி வருவதை பார்த்த பொதுமக்கள் சிறுமியிடம் விவரம் கேட்டபோது, முதியவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததை சிறுமி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முதியவரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணை செய்த கோயம்பேடு காவல்துறையினர், சிறுமியை ஆட்டோவில் கடத்தியது அமைந்தகரை என்பதால் அமைந்தகரை காவல் நிலைத்தில் முதியவரை ஒப்படைத்தனர். அதன் பின்னர் விசாரணை செய்த அமைந்தகரை காவல்துறையினர் சிறுமி வழக்கு என்பதால் இந்த வழக்கை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதியவரை ஒப்படைத்தனர். பின்னர் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த முரளிதரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட முரளிதரன் 20I9 ஆம் ஆண்டில் மாதவரம் பகுதியில் உள்ள சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.