காசோலை மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், கடந்த 2014 ஆம் ஆண்டு பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் 1 கோடியே 3 லட்சம் ரூபாய்க் கடன் பெற்றிருந்தது. ஆனால், இந்த கடனை திருப்பிக் கொடுக்காமல் அடுத்தடுத்து படங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதால் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்துமாறு இயக்குநர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இயக்குநர் லிங்குசாமி, 1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனத்திடம் வழங்கினார். ஆனால், அந்த காசோலைகள் பணமின்றி திரும்பியதால் பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் லிங்குசாமிக்கு எதிராகச் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து 2022 ஆகஸ்ட் 22ம் தேதி தீர்ப்பளித்தது உத்தரவிட்டது. இதனை எதிர்த்து லிங்குசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக்கோரியும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளான இயக்குநர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், காசோலை தொகையில் 20 சதவீதம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது மேலும் 20 சதவீதத்தை டெபாசிட் செய்ய தயாராக இருப்பதாகவும் லிங்குசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 20 சதவீத தொகையை 6 வாரங்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், லிங்குசாமிக்கு விதித்த ஆறு மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
- பி.ஜேம்ஸ் லிசா









