தூத்துக்குடியில் உள்ள ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் திருக்கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி நதிக்கரையோரம் 108 வைணவ திவ்யதேசங்களில் சிறப்புபெற்ற நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன. நவதிருப்பதிகளில் ஒன்பதாவது ஸ்தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் வருடத்திற்கு நான்கு பிரம்மோற்சவம் நடைபெறும். இந்தாண்டு பொலிந்துநின்ற பிரான் சித்திரை திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நாள்தோறும் உற்சவர் பொலிந்துநின்ற பிரான் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். 9-ம் திருநாளான இன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை 6.30-க்கு மேல் 7.30-மணிக்குள் பொலிந்துநின்றபிரான் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு தேரில் எழு்நதருளினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு கோவிந்தா கோபாலா என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், தக்கார் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
—-அனகா காளமேகன்