வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது திருவாரூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் உணவு துறை அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் நண்பர்கள் சந்திரஹாசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதயகுமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து மொத்தம் ரூ.58 கோடி அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்ததாக கடந்த 07.07.2022 அன்று திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக 51 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது தஞ்சையில் என்ஏஆர்சி ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெயரில் சொத்துக்கள் வாங்கப்பட்டு மகன்கள் பெயரில் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்தது.
இந்த வழக்கில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்டமன்ற பேரவை தலைவரின் அனுமதி பெற்று திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சிறப்பு நீதிபதி நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.






