சந்திராயன் 3 ராக்கெட் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, அதே ஆண்டில் செப்டம்பர் 2-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணித்தது. எனினும், நிலவிற்கு 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டது.
நிலவின் இருண்ட பக்கத்தில் விழுந்த லேண்டரை விஞ்ஞானிகளால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இந்த நிலையில், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் உருவாக்கும் பணி நடந்து வந்தது. இதில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமுடன் ஈடுபட்டு வந்தனர். எனினும், கொரோனா பெருந்தொற்று, அதனை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் தொடர்ச்சியாக திட்டம் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று அதிகாலை ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அதன்படி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திராயன்-3 விண்கலம் ஏறக்குறைய தயாராகி விட்டது. இறுதியான ஒருங்கிணைப்பு பணி மற்றும் பரிசோதனை ஆகியவை ஏறக்குறைய நிறைவடைந்துவிட்டது. சில பரிசோதனைகள் இன்னும் முடிவடையாமல் உள்ளது. அவற்றை சிறிது காலத்திற்குள் முடித்து வரும் பிப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களில் விண்ணில் செலத்த முடிவு செய்துள்ளோம்.
சந்திரயான் 3, ககன்யான் என அடுத்தடுத்து 4 அல்லது 5 ராக்கெட்கள் விண்ணில் விரைவில் ஏவப்படும். விண்ணில் அனுப்பிய 36 செயற்கை கோள்களில் 16 செயற்கைகோள்கள் தனியாக பிரிந்து பாதுகாப்புடன் சென்றுவிட்டன. மீதமுள்ள 20 செயற்கைகோள்கள் அடுத்து பிரிந்து செல்லும் என்றும் அவர் கூறினார்.
குலசேகரப்பட்டினத்தில் இரண்டாம் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. அவற்றின் வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சுவர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. அதன் கட்டமைப்பு பணிகளுக்காக ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது, அடுத்த இரண்டு ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும் தெரிவித்தார்.








