ராதாபுரம் எம்எல்ஏ அப்பாவு, சபாநாயகராக பதவி ஏற்றதைத் தொடர்ந்து, அவரது சொந்த கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத்தின் 16வது சபாநாயகராக, ராதாபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அப்பாவு, இன்று சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டார். புதிய சபாநாயகராக பதவியேற்றுள்ள அவருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள், வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் அப்பாவு பதவியேற்றதை, அவரது சொந்த ஊரான பணகுடியில் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.







