மறைந்த கோவை சரக டிஐஜி விஜயகுமார் வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது..
”காவலர்களின் மன அழுத்தத்தை போக்க கடந்தகால அதிமுக அரசில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவை சரக டிஐஜியாக இருந்த மறைந்த விஜயகுமார் திறமையான மற்றும் நேர்மையான அதிகாரி.
மன அழுத்தம் உள்ள ஒருவருக்கு பணி வழங்கியதால் தான் அவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு சென்றுள்ளார் . காவலர் நல்வாழ்வு திட்டத்தினை தற்போதைய ஆளும் திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது. டிஐஜி உயிரிழந்து தொடர்பாக சிபிஐ மூலம் முழுமையாக விசாரிக்க வேண்டும்.
அரசு இனியாவது மன அழுத்தம் ஏற்பட்டால் ஓய்வு வழங்க வேண்டும். காவலர் நல்வாழ்வு திட்டத்தை தமிழக அரசு மீண்டும் துவங்க வேண்டும். மகளிர் உரிமை திட்டம் துவங்கட்டும் அதனைப் பற்றி பிறகு பேசலாம். அதிமுக நாடாளுமன்ற தேர்தலுக்கு பூர்வாங்கப் பணியை துவங்கிவிட்டது.

உதயநிதி ஸ்டாலின் தான் பாஜகவின் அடிமை. அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினரை கண்டு திமுக நடுங்குகிறது. கொள்கை கோட்பாடு இல்லாத கட்சி திமுக “ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.







