விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2 கொலை வழக்குகளை பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அனைத்து வழக்குகளும் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவின் பேரில் சித்தாமூர் மற்றும் அச்சரம்பாக்கம் விஷச்சாராய மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இன்று செங்கல்பட்டு சிபிசிஐடி விசாரணை அதிகாரியான ஏடிஎஸ்பி மகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஏடிஎஸ்பி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் அச்சரம்பாக்கம் மற்றும் சித்தாமூர் விஷச்சாராய மரணங்கள் தொடர்புடைய வழக்குகளை கொலை வழக்குகளாக பதிவு செய்துள்ளனர்.
மேலும் மீதமுள்ள நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யக்கோரி, விசாரணை அதிகாரியான ஏடிஎஸ்பி மகேஸ்வரி, டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கேட்டுள்ளதாகவும், சிபிசிஐடி போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்டமாக சம்பவ இடத்திற்கு சென்று விஷச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட ஜூஸ் பாட்டிலை கைப்பற்றி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்ப இருப்பதாகவும், கைது செய்யப்பட்டுள்ள நபர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த இருப்பதாகவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.







