தமிழ்நாட்டுக்கு வர விரும்பிய தொழில் நிறுவனங்களை அண்டை மாநிலங்களுக்கு விரட்டி விட்ட எடப்பாடி பழனிசாமிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வினா எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியின் ஊழல்களை மறைக்கவும், முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை திசை திருப்பவும், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து இபிஎஸ் அவதூறு பரப்புவதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் இபிஎஸ் நடத்தியதே, உலக சுற்றுலா மாநாடு என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு சாடியுள்ளார். அவதூறுகளை முதலீடுகளாக வைத்து அரசியல் செய்யாமல் இருப்பதே இபிஎஸ்-க்கு நல்லது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து தொழில் தொடங்க முதலீடுகள் பெறுவதை முழு முயற்சியாகவும், புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதை தினசரிப் பணியாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா







