கும்பகோணம் மாசிமக விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிய வழக்கில், அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல
மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாசி மகாமக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். 2023-ல் மார்ச் 6ஆம் தேதி கும்பகோணம் மாசி மகாமக திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக கும்பகோணத்தில் உள்ள 12 சிவ ஆலயங்கள், 5 பெருமாள் கோயில்களில் கொடியேற்றம் நடைபெற்றது.
மாசி மகாமக திருவிழாவின் போது உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து
கும்பகோணத்திற்கு பல லட்சம் பக்தர்கள் வந்து கலந்துகொள்வார்கள். இந்த மாசி மகாமக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்று விழா. கும்பகோணம் மாசி மகாமக திருவிழாவில் சட்டவிரோத செயல்களை தடுக்க கும்பகோணம் மற்றும் அதன் சுற்றியுள்ள டாஸ்மார்க் கடைகளை மூடவும் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என 2021ல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஆனால், இதுவரை மாசி மகாமக திருவிழாவில் டாஸ்மார்க் கடைகள் மூடப்படவில்லை. எனவே, கும்பகோணம் மாசி மகாமக திருவிழாவில் பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சட்டம், ஒழுங்கு பிரச்னையைத் தவிர்ப்பதற்காக கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கவும், உள்ளுர் விடுமுறை அளித்து உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு
விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், திருவிழாக்களில் உள்ளூர் விடுமுறை மற்றும் மதுபான கடைகளை மூடுவதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது? எதன் அடிப்படையில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது? இதற்கு அரசாணை ஏதேனும் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
மனுதாரர் தரப்பில் அரசாணையின் அடிப்படையில் திருச்செந்தூர் திருவிழாக்களில்
உள்ளூர் விடுமுறை மற்றும் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுரையிலும்
இது போன்ற நடைபெற்று உள்ளது என தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் பெற்று தெரிவிக்க காலஅவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
-ம.பவித்ரா








