நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

புதுச்சேரியில் செய்தியாளரை ஒருமையில் பேசிய சம்பவம் தொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில நிர்வாகிகளின் கூட்டம் வில்லியனூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சீமான் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்த போது ஒரு குறுகிட்ட செய்தியாளர் ஒருவர் மதுரை, கோவை மெட்ரோ ரயில் தொடர்பாகவும், எஸ்.ஐ.ஆர் மற்றும் மாநில வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து சிமான் திடீரென செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் செய்தியாளரை சீமான் ஒருமையில் பேசியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து திருமண மண்டபத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சம்பவம்  தொடர்பாக அந்த செய்தியாளர் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் தற்போது நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தகாத வார்த்தையில் திட்டுதல் ( 296 b), தாக்குதல் (115(2)), மற்றும் கொலை மிரட்டல் (351(2)) ஆகிய மூன்று பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.