தமிழகத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து பொது இடங்களில் கடடாயம் முகக்கவசம் அணிய வேண்டுமெனவும் அவ்வாறு அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், முகக்கவசம் அணிவதால் கொரோனாவை கட்டப்படுத்த முடியாது, எனவும் மாறாக முகக்கவசம் சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல்நலக் கோளாரே ஏற்படுவதாக கூறிப்பிட்டுள்ளார்.
மேலும், முகக்கவசம் அணியாததால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது தவறானது எனவும், ரூ.500 குறைவான தொகையல்ல எனவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா விசாரணைக்கு வந்தபோது, போதிய ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளமாலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் தாக்கல் செய்துள்ளதாக பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.







