பல ஆண்டுகளுக்குப் பின்னால் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை சந்திப்பதாகவும், அதே அன்பான உபசரிப்பு எனவும் நடிகர் நெப்போலியன் ட்விட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் உலகில் உள்ள பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து, தனது திறமையால் 2 ஆஸ்கர் விருது முதல் பல உயரிய விருதுகளைப் பெற்று தமிழ் நாட்டுக்கு பெருமையைத் தேடித்தந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், தற்போது அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தற்போது, இயக்குநர் மணிரத்னம் தமிழில் புகழ் பெற்ற நாவலில் ஒன்றான “பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக தயாரித்து வருகிறார். இப்படம் 2 பாகங்களாக வெளிவரவுள்ளது. முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் முப்பதாம் தேதி வெளியாக உள்ளது. வழக்கம் போல் மணிரத்னம், ரகுமான் கூட்டணியில் இப்படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்திலிருந்து “பொன்னி நதி” எனும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்த மாதம் இறுதியில் படம் வெளியாக உள்ள நிலை, படத்திற்கான பின்னணி இசைப் பணிகளை தற்போது ரகுமான் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு இடையில் தான் இசையமைப்பாளர் ரகுமானை நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் சந்தித்துள்ளார். நெப்போலியன் அமெரிக்காவில் செட்டிலாகி டென்னசே மாகாணத்தில் உள்ள நேஷ்வில்லே என்னும் ஊரில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் அமெரிக்க சென்ற இசையமைப்பாளர் ரகுமானை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளார். 
சந்திப்பின்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நெப்போலியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “ஆஸ்கார் நாயகன் திரு ஏ.ஆர். ரகுமான் அவர்களை நாங்கள் வசிக்கும் அமெரிக்காவில் நேஷ்வில்லேவில் நேற்று இரவு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்றும், அவர் மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார். பல ஆண்டுகளுக்குப் பின்னால் சந்திக்கிறேன். அதே அன்பான உபசரிப்பு எனப் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
-யுதி







