ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுக்கு ஒப்புதல் அளிக்கும் படிவத்தை நிரப்பி பொதுக்குழு உறுப்பினர்கள் நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும் என இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரக்கூடிய 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும், ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பில் யாருக்கு இரட்டை இலை கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு இன்று நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடங்கிய பொதுக்குழுவின் முடிவின்படி தீர்மானிக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொதுக்குழுவின் வாக்கு அடிப்படையில் அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் எனக் கூறிய நீதிபதிகள், பொதுக்குழு தேர்ந்தெடுக்கும் வேட்பாளரை தேர்தல் ஆணையத்துக்கு தமிழ்மகன் உசேன் அனுப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அதனை ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதனையடுத்து தமிழ் மகன் உசேன் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஒப்புதல் படிவங்களை விநியோகம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சேலத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன், அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இக்கூட்டத்தில் அதிமுக இபிஎஸ் தரப்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து அவருக்கு ஒப்புதல் அளிக்கும் படிவங்களை நிரப்பி நாளைக்குள் ஒப்படைக்கும்படி பொதுகுழு உறுப்பினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்
உச்ச நீதிமன்றம் பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை அறிவிக்க உத்தரவிட்டுள்ளதால் ஓபிஎஸ் தரப்பில் வேட்புமனுவை தாக்கல் செய்த செந்தில் முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
– யாழன்