மெரினா கடற்கரையை துய்மையாக பராமரிப்பதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான குழுவை ஏன் அமைக்கக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் ஐஸ்கிரீம் வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்க கோரிய வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் டி.வி.தமிழ்செல்வி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மெரினா கடற்கரையை பராமரிப்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை எனவும் நீதிபதிகள் குற்றஞ்சாட்டினர். மெரினா கடற்கரை முறையாக பராமரிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவை ஏன் அமைக்க கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மெரினாவில் குப்பை போடுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறதா? மெரினா பராமரிப்புக்காக எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது எனவும் நீதிபதிகள் வினவினர்.
வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.







