குடியரசு துணைத் தலைவராக நாளை பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

நாட்டின் 15 ஆவது குடியரசு துணைத் தலைவராக சி.பி ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்கிறார்.

நாட்டின் 14வது குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர் கடந்த ஜூலை 21ம் தேதி மருத்துவ காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே, நாட்டின் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை ஆகஸ்ட் 7ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் நேற்று  நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்றது. இதனை தொடர்ந்து வாகுகளை எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. அதன்படி,தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதேபோல் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளரான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி ராதாகிருஷ்ணன் நாளை நாட்டின் 15 ஆவது குடியரசு துணைத் தலைவராக  பதவியேற்பார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத்தலைவர் மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சி.பி.ராதாகிருஷ்ணன் தனது மகாராஷ்ட்ரா ஆளுநராக  பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து குஜராத் மாநில ஆளுநராக உள்ள  ஆச்சார்ய தேவ்ரத்துக்கு, அப்பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.