புதுக்கோட்டை மாவட்டம். திருமயம் அருகே கோயில் திருவிழாவை
முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் , திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் ஸ்ரீமுத்துமாரியம்மன்
கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்
நடைபெற்றது.
இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை
ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
மேலும், போட்டி பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றன.
பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 8 ஜோடி மாட்டு வண்டிகளும், சிறிய மாட்டு
வண்டி பந்தயத்தில் 10 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. பெரிய மாட்டு
வண்டிக்கு 12 கிலோ மீட்டர் தூரமும், சிறிய மாட்டு வண்டிக்கு 9 கிலோமீட்டர்
தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இந்த பந்தயத்தில்,
மாட்டு வண்டிகள் சாலையில் துள்ளிக்குதித்தும் , முந்திச்சென்றும் பார்வையாளர்களின்
கவனத்தை ஈர்த்தது.
இந்த பந்தயத்தில் பெரிய மாட்டு வண்டி பிரிவில், முதல் பரிசாக ரூ.16,001-ஐ
சிவகங்கை மாவட்டம் எறும்புக்குடி செல்வராஜ் என்பவரது மாட்டு வண்டி பெற்றது.
இரண்டாவது பரிசாக ரூ.14,001, மூன்றாவது பரிசாக ரூ.12,001, நான்காவது
பரிசாக ரூ.10,001 வழங்கப்பட்டது.
இதனை போலவே, சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் நான்கு இடங்களை பெற்ற
மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு, ரொக்கப் பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக
வழங்கப்பட்டன. மேலும் , இப்போட்டியை காண்பதற்காக சாலை நெடுகிலும் இரு
புறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
—கு.பாலமுருகன்







