ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற கார்னிவல் திருவிழாவில், நூற்றுக்கணக்கான நாய்கள் வித்தியாசமான உடைகளில், அணிவகுத்துச் சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் கார்னிவல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு வேடங்கள் அணிந்து நடனமாடியபடியே பொதுமக்களும் கலைஞர்களும் ஊர்வலமாக சென்றனர். அதன் ஒரு பகுதியாக, செல்லப்பிராணிகளின் அணிவகுப்பும் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ப்ளோகாவோ (Blocao) எனப்படும் கார்னிவல் ஸ்ட்ரீட் பார்ட்டிகளில், விதவிதமான உடைகளில், நூற்றுக்கணக்கான நாய்கள் (செல்லப்பிராணி) அணிவகுத்துச் சென்றன. தேவதை, சூப்பர் ஹீரோக்கள், கோமாளி, கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள், என பல்வேறு உடைகளில், சம்பா இசைக்கு வாலை ஆட்டியபடி வந்த செல்லப்பிராணிகளை, கூடியிருந்த மக்கள் ஆச்சரியமுடன் கண்டு ரசித்தனர்.
இதையும் படியுங்கள் : ஏற்றுமதியில் உயர்வு – மறுமலர்ச்சியை நோக்கி திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள்
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் ’ப்ளோகாவோ’ நடத்தப்படுவதால், 300க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.
36 வயதான சியான்கா, தனது 12 வயது நாய்க்கு மின்னி மவுஸ் உடை அணிவித்தது மட்டுமல்லாமல், அதற்கு ஜோடியாக அவரும் அதே உடையில் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டார். இது செல்லப்பிராணிகளுடன் பழகுவதற்கான நல்ல தருணம் என்று அவர் தெரிவித்தார்.
ப்ளோகாவோ அமைப்பாளரான மார்கோ அண்டோனியோ வியேரா, “முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவை, வீட்டின் கொல்லைப்புறத்தில் வாழ்ந்தன. இப்போது எங்கள் படுக்கை அறைகளில் வாழ்கின்றன. உரிமையாளருடன் இருப்பது அவைகளுக்கு நல்லது. நாய் உரிமையாளர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்கும்போது, அவைகளும் மகிழ்ச்சியடைகின்றன. இந்த அணிவகுப்பில் மகிழ்ச்சியான மக்களைத் தவிர வேறு எதுவும் இல்லை” என்று கூறினார்.