விழுப்புரம் அருகே விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கக்கனூரை சேர்ந்தவர் சந்தோஷ் (33).கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி புவனேஸ்வரி மற்றும் ஒரு வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி விழுப்புரத்தில் இருந்து தனது இருச்சக்கர வாகனத்தில் கக்கனூர் நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் போது அவரது இருச்சக்கர வாகனம் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சந்தோஷ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். தொடர்ந்து அங்கிருந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இளைஞருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூளை சாவு அடைந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து மூளை சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவியும் பெற்றோர்களும் விருப்பம் தெரிவித்ததன் பேரில் இன்று முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக்குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் சந்தோஷின் இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகம், இரண்டு நுரையீரல் இரண்டு கருவிழிகள் ஆகியவைகள் அகற்றி அந்த உறுப்புக்கள் சென்னை மற்றும் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு 8 பேருக்கு மறு வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறந்த சந்தோஷின் உடலுக்கு ஆட்சியர் மோகன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு உடல் உறுப்பு தானம் செய்தற்கான சான்றிதழ்களை வழங்கினார்.
இறந்த பின்பும் தனது உடல் உறுப்புகள் மூலம் 8 பேரின் உயிரில் கலந்து மனித
வாழ்வு மகத்தான வாழ்வு என்பதை நிரூபித்துள்ளது இளைஞரின் மரணம். தனது பிள்ளைக்கும், குடும்பத்திற்கும் தமிழக அரசு உதவிட வேண்டும் என்ற சந்தோஷின் மனைவி புவனேஷ்வரி கோரிக்கை வைத்துள்ளார்.







