சென்னையில் 7 வயது சிறுவன் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் தீக்ஷித் கடந்த 28-ம் தேதி பள்ளி வாகனம் மோதி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலெட்சுமி, வாகன ஓட்டுநர் பூங்காவனம், பணிப்பெண் ஞானசக்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், பூங்காவனம் மற்றும் ஞானசக்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் விபத்து தொடர்பாக விளக்கம் கேட்டு பள்ளி நிர்வாகத்திற்கு வளசரவாக்கம் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அதில், பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை என்னென்ன என்பது குறித்து 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.. மேலும், இந்தக் கேள்விகளுக்கு இரண்டு நாட்களுக்குள் பள்ளியின் தாளாளர் அல்லது முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







