டெல்லியில் மதுபான விற்பனைக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி விலகக் கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் மதுபான விற்பனைக் கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக் கோரி, ஆம் ஆத்மி கட்சி அலுவலகங்களுக்கு வெளியே பாஜக சார்பில்இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் காவல் துறையினரின் பாதுகாப்புத் தடுப்புகளை தள்ளிவிட்டு அலுவலகங்களுக்குள் செல்ல முயன்றனர். போலீசார் தடுத்து நிறுத்தியதையடுத்து பாஜகவினர் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை இரண்டாவது குற்றப்பத்திரிகையை அண்மையில் தாக்கல் செய்தது. இதன்மூலம், முதல்வர் கெஜ்ரிவால் ஊழலில் ஈடுபட்டது நிரூபணமாகி உள்ளது என பாஜக கூறியிருக்கிறது. டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், 5 நபர்கள் மற்றும் 7 நிறுவனங்களுக்கு எதிரான துணை குற்றப் பத்திரிகையை நீதிமன்றம் நேற்று ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா








