பாஜக கட்சத்தீவை கட்டாயம் மீட்கும். திமுக அரசியல் கபட நாடகமாடுகிறது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டு மக்களுக்கு நேற்றைய தினம் சரித்திர நாள். தமிழ்நாட்டு மக்களின் வரவேற்பு பிரதமரை நெகிழச் செய்தது. உற்சாக வரவேற்பைப் பார்த்து, மனம் நெகிழ்ந்துவிட்டேன் என்று சொல்லிவிட்டு தான் பிரதமர் டெல்லி புறப்பட்டு சென்றார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த எல்.முருகனும், பிரதமருடன் மேடையில் அருகில் அமர்ந்திருந்தார். இதுவே சமூக நீதி என குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், I Phone தயாரிப்பு நிறுவனம், மோடியின் திட்டத்தால் தான் ரூ.25,000 கோடி மதிப்பில் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு ரூபாயைக் கூட முதலீடு செய்ய வைக்க முடியாதது தான் திராவிட மாடலாக திமுகவினர் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ரூ.70,189 கோடி மத்திய அரசின் பங்காக தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் வழங்கியதை விட 2014 முதல் இப்போது வரை இரண்டரை மடங்கு அதிகமாக ரூ.1,19,455 கோடியை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கியுள்ளது. பாஜக ஆட்சியில் ரூ.7.35 லட்சம் கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. GST இழப்பீடாக தமிழ்நாட்டுக்கு வரவேண்டியது ரூ.6,500 கோடி என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் கூறினார். GST இழப்பீடு ரூ.14,006 கோடி என்று நேற்று முதலமைச்சர் பேசியிருக்கிறார். இதில் எது உண்மை? என கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழ் மொழியை காப்பது போல் தொடர்ந்து பேசி வருகிறார் ஸ்டாலின். தாய் மொழியான தமிழில் படிப்பதை திமுக அரசு கட்டாயமாக்கியதா? இல்லை. புதிய தேசிய கல்விக்கொள்கை மூலம் அதை கட்டாயமாக்கியவர் மோடி. இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பள்ளி மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன் குறைவாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தொடர்ந்து கல்வியை அழித்ததற்கு பட்டம் தரவேண்டுமென்றால் அதை திமுகவுக்குத் தான் தர வேண்டும். நீட் என்ற பொம்மையை வைத்து முதலமைச்சர் டிராமா போடுவதாக தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியை கட்டிப்பிடித்தது, மீனவப்பெண் பாலியல் பலாத்காரம், லாக் அப் மரணங்கள், பாஜக நிர்வாகி கொலை, சினிமாவை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பது, கமிஷன் அடித்தது, BGR Energy-க்கு ஒப்பந்தம் வழங்கியது தான் திமுக அரசின் ஓராண்டு சாதனை. இதுதான் திராவிட மாடல். ஜூன் முதல் வாரத்தில் திமுக அரசு செய்த மிகப்பெரிய இரண்டு ஊழல்களை ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். இனி ஒவ்வொரு துறை வாரியாக ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என கூறினார்.
கச்சத்தீவு குறித்த கேள்விக்கு, கட்சத்தீவு பற்றி பேச உரிமையில்லாத கட்சி திமுக. திமுகவிலும் பேசவே கூடாத ஆள் யார் என்றால் அது ஸ்டாலின். என் அப்பா தெரியாமல் தவறு செய்துவிட்டார். கட்சத்தீவை தாரை வார்த்தது நாங்கள் தான். என் அப்பா செய்தது தவறு என்று ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். நானே அறிவாலயம் வருகிறேன். அவரையும் கூட்டிக்கொண்டு டெல்லி செல்கிறேன். கட்சத்தீவை மீட்பதற்கான வேலைகளை தொடங்குவோம். கட்சத்தீவு விஷயத்தல் திமுக கபட நாடகமாடுகிறது என தெரிவித்தார்.
ஸ்டாலினின் நண்பர்களாக உள்ள இலங்கை அரசியல் தலைவர்கள் தான் கட்சத்தீவை தரக்கூடாது என்று பேசுபவர்கள். திமுக நடத்துவது கபட நாடகம். பாஜக கட்சத்தீவை கட்டாயம் மீட்கும். திமுக – காங்கிரஸ் கூட்டணி அரசு இலங்கையில் செய்த குளறுபடிகளை பாஜக அரசு இப்போது தான் சரி செய்துள்ளது. நிச்சயம் தமிழ் மக்களின் நலன் காப்போம் என தெரிவித்தார்.