தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புத்தகம் வழங்க விசிகவினர், கமலாலயம் செல்ல வேண்டாமென அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை கோயம்பேட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியின் போது பாஜக – விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மோதலுக்கு காரணமான பாஜகவினரை கைது செய்ய வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக விசிக தலைவர் திருமாவளவனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியிருந்தார். அதில், அம்பேத்கார் குறித்து விவாதம் நடத்த வருமாறு திருமாளவனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த விசிக தலைவர், அரசியலுக்கு அண்ணாமலை சப்ஜூனியர். அவருடன் விவாதம் நடந்த விசிகவிலிருந்து சப்ஜூனியரை அனுப்பி வைக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இளஞ்சிறுத்தைகள் மாநில செயலாளர் சங்கத்தமிழன் அண்ணாமலையுடன் விவாதம் செய்ய தயார் என்று தெரிவித்திருந்தார். இதனை அண்ணாமலையும் ஏற்றுக்கொண்டார். ஏப்ரல் 26ம் தேதி கமலாலயத்தில் வைத்து விவாதம் செய்து கொள்ளலாம் என அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
https://twitter.com/thirumaofficial/status/1518806857313583104
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதுவரை 20,000 புத்தகங்களைப் படித்திருக்கிறார் எனும் போது அவற்றில் புரட்சியாளர் அம்பேத்கரின் நூல்களும் இருக்கலாம். எனினும் அவருக்குத் தேவையெனில் அம்பேத்கரின் நூல்களை அஞ்சலில் அனுப்பி வைப்போம். அல்லது அவர் அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாஜக மாநில தலைவருக்கு புரட்சியாளர் அம்பேத்கரின் இந்துவத்தின் புதிர்கள் எனும் புத்தகத்தை வழங்கிட பாஜக அலுவலகத்திற்குச் செல்வதைத் தவிர்க்கும்படி இளஞ்சிறுத்தைகள் மாநில செயலாளர் சங்கத்தமிழன் அவர்களிடம் கூறியுள்ளேன். எனவே, இளஞ்சிறுத்தைகள் அங்கே செல்வதைத் தவிர்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.







