அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் சந்தித்து பேசினர்.
சென்னை வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமைக்கு அதிமுக நிர்வாகிகள் பெரும்பாலானோர் ஆதரவு அளித்தனர். இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் பொதுக்குழுகூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது பாதியிலேயே புறக்கணித்து விட்டு வெளியேறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் எடப்பாடியாரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது அதிமுக நிர்வாகிகள் தமிழ்மகன் உசேன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்முக்கு ஆதரவு கோரி இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னர் அங்கிருந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் சந்தித்து பேசினர்.
அதிமுக பொதுக்குழு நடந்து முடிந்த சில மணி நேரத்திற்குள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் சந்திப்புக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் பாஜகவின் தலையீடு எப்போதும் இருந்தது இல்லை. பாஜக எப்போதும் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட்டது இல்லை. குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க கோரி தான் பாஜக மேலிடத் தலைவர்கள் வந்தார்கள்.
குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுக முக்கிய நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.