பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸூம் நாட்டை பிளவுபடுத்துகின்றன-ராகுல் காந்தி

பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸூம் நாட்டை பிளவுப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் எம்பி ராகுல் காந்தி  பேசினார். மத்திய அரசின் ஆட்சியில் காணப்படும் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றை கண்டித்து டெல்லி ராம்லீலா…

பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸூம் நாட்டை பிளவுப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் எம்பி ராகுல் காந்தி  பேசினார்.

மத்திய அரசின் ஆட்சியில் காணப்படும் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் மிகப்பெரிய போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் வெறுப்பும், பிரிவினைவாதமும் அதிகரித்துள்ளன. பாஜக, ஆர்எஸ்எஸ் இரண்டும் நாட்டை பிளவுபடுத்துகிறார்கள். பயம் மற்றும் வெறுப்பு மூலம் மக்களை பிளவுபடுத்துகிறார்கள். இந்த பயத்தால் யாருக்கு லாபம்? நரேந்திர மோடி அரசால் ஏழைகள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் ஏதாவது பலன் பெறுகிறார்களா? இரண்டு கார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமே பலன் பெறுகிறார்கள். இரு தொழிலதிபர்களுக்கும் அனைத்து சலுகைகளையும் பாஜக அரசு கொடுத்து வருகிறது என்று குற்றம்சாடினார்.

பிரதமர் மோடி அரசின் கொள்கைகள் இரண்டு பெரிய தொழிலதிபர்களுக்கு மட்டுமே பலனளித்து வருகின்றன. அவர் தனது நண்பர்களுக்கு சம்பாதித்து தருவதற்காக ஓய்வில்லாமல் உழைக்கிறார். அந்த இரு நண்பர்களுக்காக பிரதமர் மோடி 24 மணி நேரமும் அயராது உழைத்து வருகிறார். ஆனால் மக்களோ விலைவாசி உயர்வால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விவசாயிகள் நலனுக்காக மோடி அரசில் 3 விவசாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அவை விவசாயிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட சட்டங்கள் இல்லை. இரு கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக கொண்டு வரப்பட்டது மட்டுமே. ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக மழை, வெயில் குளிர் என எதையையும் பாராமல் சாலையில் அமர்ந்து போராடி விவசாயிகள் தங்கள் சக்தி என்ன என்பதை பிரதமர் மோடிக்கு காட்டிவிட்டனர் என்று கூறினார்.

நாட்டின் முதுகெலும்பான சிறு, குறு நிறுவனங்களுக்கு பிரதமர் ஜிஎஸ்டி வரி மூலம் மூடுவிழா நடத்தி விட்டார். இதன்மூலம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இரு பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்குவதில்லை. அதுமட்டுமல்லாமல், கங்கிரஸ் ஆட்சியில் இருந்த கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது விலைவாசி உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.