உதகையில் காட்டெருமைகள் உலா வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில், கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக நிலவிவரும் பனிப்பொழிவின் காரணமாகவும், பகல் நேரங்களில் நிலவும் வெயிலின் காரணமாகவும் வனப்பகுதிகளில் உள்ள செடி, கொடிகள் கருகிய நிலையில் காட்சியளிக்கின்றன.
இதனால் வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. அந்த வகையில், உதகை நகரின் மையப் பகுதிகளில், காட்டெருமைகள் உலா வருகின்றன. நகரின் முக்கிய வர்த்தக சாலையான கமர்சியல் சாலை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காட்டெருமைகளை காணும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து விற்பனை – மருந்தகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்
சமீப காலமாக உதகையில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– அனகா காளமேகன்







